கவிஞர் கால்நூற்றாண்டு பணிபுரிந்த மன்றம்
வீரசிங்கம் மகாவித்தியாலய வரலாறு ஸ்ரீமான் வீரசிங்கம் அவர்கள் மீசாலை வடக்குப் பகுதியில் 1840ம் ஆண்டிற்கும் 1915ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் சீவித்திருந்தார்கள். இவர் மீசாலை வடக்கில் இருந்த வேதாரணியரின் மகன். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி கற்றவர். நியாய துரந்தரராவற்கான படிப்பும் படித்தவர். அவர் சீவித்திருந்த காலத்தில் இப்பகுதியிலுள்ளவர்கள் கல்வியறிவு குறைந்தவர்களாய் இருந்தார்கள். தம் இளமைப்பருவத்திலிருந்தே இப்பகுதி யிலுள்ளவர்களைக் கல்வி அறிவு உள்ளவர்களாக்க முயன்றார். அந்தக்காலத்தில் அமெரிக்க மிஷனரிமார் அரசினர் உதவியோடு கிராமங்களில் பாடசாலைகளை உண்டாக்கிக் கல்வி கற்பித்து வந்தார்கள். அவர்களுக்கு மீசாலையில் இருந்து புத்தூருக்குப் போகும்தெரு - கண்டித் தெருவைச் சந்திக்கும் இடத்தில் தன்னுடைய காணியைப் பாடசாலை வைத்து நடாத்துவதற்குக் கொடுத்தார். அந்தப் பாடாசாலை மீசாலை முச்சந்திப் பாடசாலை எனக் கிறீஸ்தவ மிஷனறிமாரின் பாடசாலை ஆக 1924ம் ஆண்டு ஆவணி மாதம் முடிய நடைபெற்று வந்தது. கிறீஸ்தவ மிஷனரிமார் ஆரம்ப கல்வி கற்பிப்பதன் மூலம் கிறீஸ்தவ சமயத்தையும் போதிப்பதையும் அவர் கண்டார்.