ஈழத்து நவீன கவிதை இலக்கிய முன்னோடி தா. இராமலிங்கம் - ஓர் நோக்கு.

சி.ரமேஷ்

தமருகம் வலைப்பதிவில் 2008 செப்ரெம்பர் 26ல் வெளியான கவிஞரின் கவிதைகள் பற்றிய ஆய்வு

ழத்து நவீனகவிதை வரலாற்றில் 1960 ஆண்டுகள் முக்கியமான காலப்பிரிவாகும். 1956 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட தனிச்சிங்களச்சட்டம் அரசியல் மாற்றம் ஒன்றுக்கு வழிகோரியதுடன் 1958 இல் பாரிய இனக்கலவரமொன்றுக்கும் கால்கோலானது. இனரீதியான அரசியல் எழுச்சி மக்கள் மத்தியில் தேசியம் பற்றிய விழிப்புணர்வை தூண்டியதுடன் முற்போக்கு சிந்தனையும், சமூகப்பிரக்ஞையுமுடைய நவீன கவிதைகளையும் தோற்றுவித்தது. உணர்ச்சியும் வேகமும் கொண்ட சுபத்திரன், பசுபதி, ஈழவாணன், வி.சிவானந்தன் பண்ணாமத்துக் கவிராயர் போன்ற கவிஞர்களுக்கு வழிசமைத்துக் கொடுத்த இதே காலகட்டம் மஹாகவி, இ.முருகையன், எம்.ஏ.நுஃமான், சண்முகம் சிவலிங்கம், ஏ.இக்பால், மு.பொன்னம்பலம், தா.இராமலிங்கம் போன்ற கவிஞர்கள் சமூகநோக்கு மிக்க நவீன கவிதைகளை ஆக்கவும் வாய்ப்பளித்தது. இவ்வகையில் தன்னுணர்வுக் கவிதைகளுக்கூடாக தாம் வாழ்ந்த காலத்தையும், சூழலையும் நன்கு பதிவு செய்தவர் தா.இராமலிங்கம் ஆவார்.

1933 இல் சாவகச்சேரியிலுள்ள கல்வயல் கிராமத்தில் பிறந்த தா.இராமலிங்கம் சாவகச்சேரி இந்துக்கல்லூரியிற் கல்வி பயின்று, சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிற் பட்டதாரியானார். 1964 இல் இரத்தினபுரி பரிலூக்கா கல்லூரியில் ஆசிரியராக இருந்த காலத்தில் இவரெழுதிய 38 கவிதைகளைத் தாங்கி “புதுமெய்க்கவிதைகள் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து 1965 இல் “காணிக்கை” என்னும் தொகுப்பு இவரெழுதிய 31 கவிதைகளுடன் வெளிவந்தது இதனைத்தவிர “மரணத்துள் வாழ்வோம் , பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், 20 ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க்கவிதைகள்போன்ற தொகுப்புக்களுக்கூடாகவும் அலை, புதுசு, சுவர் போன்ற சஞ்சிகைகளுக்கூடாகவும் இவரின் கவிதைகள் நன்கறியப்பட்டன.

தா.இராமலிங்கத்தின் பெரும்பாலான கவிதைகளில் யாழ்ப்பாண சமூகத்தின் இயல்புநிலை மிக நேர்த்தியான முறையில் காட்சிப்படுத்தப்படுகிறது. கட்டியதாலிக்காக வறுமைக்குள் தன்னைக் கருக்கும் மனைவி (தூக்கட்டும் தூக்கட்டும்), வயலில் எவரின் உதவியின்றி வியர்வைகக்க தனித்து உழும் உழவன் (நான், விளைநிலம்) போலி ஆசாரங்களுக்குள் கட்டுண்டு செத்தை மறைவுக்குள் செல்லாக்காசாகும் வேளாளத்திமிர (ஆசைக்குவெட்கமில்லை), சமூகக்கட்டுமானத்துக்குள் சிக்குண்டு பார்வையால் பாலியல் வன்புணர்வு செய்யும் வாலிபன் (காமம், கிழியட்டும் முக்காடு) என விரியும் தா.இராமலிங்கத்தின் கவிதைகள் ஒரு சமூகத்தின் யதார்த்த வாழ்வை இயல்பு நிலை பிறழாது மிகத்தத்துருபமாக எடுத்துரைக்கிறது.

ஆழமான வார்த்தை பிரமாணங்களுக்கூடாக கட்டுறும் “ஆசைக்கு சாதியில்லை” என்னும் கவிதை மேல்தட்டு வர்க்கத்தின் போலிமுகங்களையும் ஆசார அனுட்டானங்களையும் வெளியுலகுக்கு அம்பலப்படுத்துகிறது.

“வேளாளர் குடிப்பிபிறந்து
பிறர்
ஆசார முட்டையிலே
மயிர் பிடிக்கும்”

என்னும் மிகச்சூட்சுமான வீரியவரிக்கட்டுமானம் பிறரில் குற்றம் காணும் மேற்சாதி ஆசார அனுபூதியைக் கட்டவிழ்த்துக்காட்டுகிறது. ஆசையால் தன்பிழையைச் சரிக்கட்டும் போலி நியாயம்

“மருந்து நல்லதென்றால்
கள்
அருந்துவதில் என்ன குற்றம்
என்னும் வரிக்கூடாக மிகத்துல்லியமாக வெளிப்படுகிறது ஈற்றில் எவ்வித நியாயமும் சொல்லமுடியாத அப்பட்டமான வாழ்வின் நிலையை தா.இராமலிங்கம்

“இன்பம் நுகர்ந்தேன்
என ஆசாரமுட்டையிலும், ஆசாரமுட்டையிலும்
கறுப்பு மயிர் கண்டேன்”
என்னும் வரிகளுக்கூடாக வெகு இயல்பாக வெளிப்படுகிறார். வாழ்தலே கடனெனஅஞ்சி வாழ்ந்து மடியும் நடுத்தரவர்க்கத்தின் இயல்புநிலை “குஞ்சு திரளாதோ” கவிதையில் மிகத்தத்துருபமாக எடுத்துரைக்கப்படுகிறது.

“சட்டி நிறை கஞ்சி
நக்கி உணல் முடிய
நாயேன் கழிக்கின்ற காலம் மிகப்பெரிது
முந்நூறை நோக்குகிறேன்
மூன்றில் ஒன்றைப் பாய்ந்திடனோ? கூழ்முட்டையாகிப் பாழ்பட்டுப் போகாமல்
குஞ்சு திரள்கின்ற மெய்யுடல் ஆக்கேனோ?”
பிரதேசத்துக்குரிய கருப்பொருட்களுக்கூடாக நிலைபெறும் இக்கவிதை வழக்காற்று மொழிப் பிரயோகங்களுக் கூடாகவே தன்னைக்கட்டமைக்கிறது.

தன்னுடல் பசிநீக்க வலியற்று தினமும் தன்னை சித்திரவதைப்படுத்தும் கணவனைக் கொன்ற மனைவியை சமூகநீதிக்கு முன்னால் நிறுத்தி அவள் செய்த ஆசாரப் புரட்சி சரிதான் எனக்கூறி அதனை நியாயப்படுத்தும் (தூக்கட்டும் தூக்கட்டும்) கவிதை கலாசார மரபுக்குள் பெண்படும் அவஸ்தையை கண்முன் நிறுத்துகிறது. வேலி தாண்டிய பெண்ணின் சுயம் சார்ந்த உரிமைக்குரல் இக்கவிதையெங்கும் ஈரமாய் கசிகிறது. சமூகக்கலாசாரத்தால் மறைக்கப்பட்ட பெண்ணின் மனஉணர்வுகளை முதன்முதலில் அப்பட்டமாக வெளிப்படுத்திய கவிதை இது எனலாம்.

சாதரண மக்கள் பயன்படுத்தும் பேச்சு மொழிச் சொற்களை கவிதையின் தேவையறிந்து பயன்படுத்தியவர் தா.இராமலிங்கம் ஆவார். தேவையற்ற அடைமொழிகளுக்காகவோ, ஓசைச்சிறப்புக்காகவோ இப்பிரதேச வட்டாரச் சொற்கள் கையாளப்படாது கவிதையின் தெளிவு கருதி தா.இராமலிங்கத்தால் யாழ்ப்பாணப்பிரதேச வழக்காற்றுச் சொற்கள் கையாளப்படுகின்றன.

“ ஒளி கூரக்கூர
சூடேற ஏற
நன்றுதிறனோடு
குஞ்சு திரளுது”
(குஞ்சு திரளாதோ)

“பன்னாட்டு ஒடியற்பிட்டு
செவ்வரிசிக் கஞ்சி
உயிர்ச்சத்துப் பொருள் யாவும்
உண்டிடுறேன் இன்றுதொட்டு”
(கடைதீனி வேண்டாம்.)

இவ்வாறு தா.இராமலிங்கத்தால் கவிதையில் பயன்படுத்தப்படும் பேச்சு மொழிச்சொற்கள் உணர்வின் வெளிப்பாடாக அமைவதுடன் கவிதையின் இயல்புத்தன்மை விகாரப்படாமல் இருப்பதற்கும் வழிகோருகிறது.

குறியீடு, படிமம் என்னும் நுண்பொருள் உத்திக்கூடாக விரியும் தா.இராமலிங்கத்தின் கவிதைகள் பிரத்தியேக மொழி அமைவுக்குள் கட்டுருபவை இவரின் படிமங்கள் எளிமையானவை. அதேசமயம் குறுகிய எல்லைக்குட்பட்டவை கலக்கம் கவிதையில் இடம் பெறும்

“செத்த பகலின்
சடலம் எரிமூட்டி
விட்டகன்றார் விண்வெளியில்
சாம்பல் புதையுண்ட
காற்றில் மினுங்கூது”

என்னும் வரிகள் மாலைக்காட்சிக் கூடாக, மாறும் மன உணர்வின் பேதைமைகளை எடுத்துரைக்கின்றன. “தேடல், அனுபவம், செந்நா பொரிகிறது, பெருஞ் செல்வம், மனம் வருகுதோ, கழுவு தெரியும், அடைகிடக்கு” போன்ற கவிதைகள் செறிவடர்த்தி கொண்ட படிமங்களுக்கூடாக கட்டுருபவை நுண்ணிய மனவுணர்வுக் கூடாகவும், புறப்பொருட் காட்சிக் கூடாகவும் கட்டுறும் இப் படிமங்கள் நுண்ணிய தளத்துக்கு மொழியை மாற்றிச் செல்கிறது.
பொது நிலைக் கவிஞராகவும் அதே சமயம் சார்பு நிலைக் கவிஞராகவும் இனம் காணப்படும் தா. இராமலிங்கம் குறியீட்டு உத்தியை தேவையறிந்து பயன்படுத்துவதில் வல்லாளர் இவரின் கவிதைகள் பெரும்பாலும் பொது நிலைக் குறியீட்டு உத்திக் கூடாகவே தன்னை நிலைப்படுத்துகின்றன. அதிலும் குறிப்பாக அகிலத்துவ குறியீட்டை உள்வாங்கியே இவரின் கவிதைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
சமூக அமைப்பின் ஏற்றத்தாழ்வை காட்சிப்படுத்தும் “பிரயாணம்” என்னும் கவிதை மு.தளையசிங்கம் கூறுவதைப் போல் ‘புகைவண்டி’ என்னும் குறியீட்டுக் கூடாகவே முழுச்சமூகக் கட்டமைப்பையும் காட்சிப்படுத்துகிறது. இதனைப் போன்று அகிலத்துவக் குறியீட்டு உத்தியை உள்வாங்கி “புகை, பாரச்சுமை, விளக்குமாறு என்ன செய்யும், சிறுவரம்பு, நுகர்ச்சி” முதலான கவிதைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இக்கவிதைகளில் தா.இராமலிங்கம் பயன்படுத்தும் நுண்பொருள் உத்திகள் பரந்த அளவில் மீள்வாசிப்புக்குட்படுத்தி ஆராயப்பட வேண்டிய தொன்றாகும்.
எஸ்.பொன்னுத்துரை, மு.தளையசிங்கம், முருகையன் போன்ற இலக்கிய ஆய்வாளர்களால் விதந்துரைக்கப்பட்ட தா.இராமலிங்கத்தின் கவிதைகள் “இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்”, “ஈழத்து நவீன கவிதை” போன்ற நூல்களில் குறிப்பளவிலேயே எடுத்துரைக்கப்படுகின்றன. இக் கவிதைகளை நவீன இலக்கிய ஆய்வாளர்கள் முழுமையான ஆய்வுக்குட்படுத்தி ஆராயப்பட வேண்டிய காலத்தின் அவசியமாகும். அவரின் கவிதைகளை தமிழுலகு நிறைந்த கண்கொண்டு விரிந்ததளத்தில் இலக்கிய ஆய்வுக்கு உட்படுத்தப்படாத வரை ஈழத்து நவீன கவிதை எந்நாளும் முழுமைத்துவத்தை அடையாது.

Comments

Popular posts from this blog

பெருந்தன்மைக்கு இலக்கணமாக நினைவில்