எளிமைமிகு படைப்பாளி எங்கள் கவிஞர்
திரு. இராமலிங்கம் அவர்களின் கவிதைகளை படித்திருந்தமையினால் மிகப் பரிச்சயமான நண்பர் போன்ற உணர்வு முதலில் சந்தித்த போதில் மேலோங்கியிருந்தது. பின்னாளில் அவரது கவிதைகளை எனது ஓய்வு நேரங்களில் தட்டச்சில் பல பிரதிகளாகப் பொறித்து ஆவணப்படுத்தும் பணியினையும் செய்திருந்தேனாகையால் அவரது கவிதைகளில் மிகுந்த நெருக்கம் கொண்டிருந்தேன். அவரது கவிதைகளின் மீது ஆர்வம் கொண்ட ஒரு வாசகன் என்பதனைத் தவிர அவரது கவிதைகள் பற்றி கருத்துச்சொல்ல, விமர்சனம் எழுத எனக்குப் பக்குவம் போதாது. ஆயினும் அவரின் கவிதைகள் பற்றிய எனது சில மனப்பதிவுகளையும் கிளர்ச்சிகளையும் சொல்வதன் மூலமாக அவர் பற்றிய என் புரிதல்களை ஒருசில வரிகளில் வெளிப்படுத்த விரும்புகிறேன்.
பாரம்பரிய கவிதை இலக்கணங்களுக்குள் அகப்படாமல் சமுதாயம் சார்ந்த தன் பார்வைகளையும் சமூகத்தின் போலித்தனங்களையும் எளிமையான வார்த்தைகளில் நவீன கவிதைகளாக அவர் வடித்தார். ஒருவர் தனது வாழ்வில் இளமைப்பருவத்திலிருந்து முதுமைவரை பலவிதமான சமூகம் சார்ந்த அரசியல் சார்ந்த மாற்றங்களை காண்பது வழக்கமானது. அமரர் அவர்களும் தான் அவ்வப்போது எதிர்கொண்ட மாற்றங்களை உள்வாங்கி, அவை அவருள் ஏற்படுத்திய சிந்தனைகளை கவிதைகளாக பிரதிபலித்தார். மாற்றங்கள் வேண்டும் என்கிற அவா அவரின் வரிகளில் இளையோடுகின்றது. மலைகளை, வனப்புமிகு காட்சிகளை மங்கையரை என கற்பனை விஞ்சிய, யதார்த்தத்துக்கு பொருத்தமற்ற ரசனைகளில் திரு. இராமலிங்கம் அவர்கள் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. தமிழரின் வாழ்வியலின் பிரச்சனைகளை உயிர்ப்புடன் அணுகியதால் அவரின் கவிதைவரிகள் எம்முள் ஆழமான உணர்வுகளை உருவாக்குகின்றன. அவரது வரிகளை தட்டச்சிடுகையில் அவை சொல்லும் அர்த்தங்களால் பலதடவை செயலற்று இருந்துள்ளேன். சிங்கள இராணுவத்தால் சுடப்பட்ட ஒரு தமிழ்மகன் உயிர்விடும் தருணத்தில் தண்ணீருக்காக ஓலமிட்டபோது மனித நேயமிக்க இன்னொரு சிங்கள் இராணுவத்தினன் தன் இரும்பு தொப்பிக்குள் நீரேந்தி வந்து பருகக்கொடுத்த செய்தியைப்படித்த கவிஞர் எழுதிய கவிதையின் சாரம் இன்றுவரை என்னால் மறக்கப்பட இயலாததாக இருக்கின்றது.
தமிழ்மக்களின் விடிவுக்காக தமிழ்த்தேசியத்தின் மீது அவர்கொண்டிருந்த நம்பிக்கையை கவிதைகளில் மட்டுமன்றி செயல்வழிகளில் அவர் வெளிப்படுத்தினார். பாடசாலை சார்ந்தும் சமூகம் சார்ந்தும் பல்வேறுவழிகளில் தமிழ்த்தேசியத்தின் பாலான பல ஒத்துழைப்புக்களை அவர் தயக்கமின்றி வழங்கினார். அவ்வகை சார்ந்த எனது செயற்பாடுகளுக்கு அவர் மிகுந்த ஒத்தாசைகள் புரிந்தார்.
ஏறத்தாழ கால்நூற்றாண்டுகாலம் வீரசிங்கம் மகாவித்தியாலயத்தில் ஆசிரியப்பணியை பல நிலைகளில் வழங்கிய அந்த பெருமனிதர் இயற்கை எய்தியமை பேரினவாதத்தின் கொடுங்கரங்களால் சுற்றிவளைக்கப்படும் வன்னிமண்ணில். தற்போதைய இடப்பெயர்வு அவலங்களின் போதில் மல்லாவியிலிருந்து துணைவியார், இளையமகனாகிய மருத்துவக்கலாநிதி கதிர்ச்செல்வன் குடும்பத்தினருடன் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்தவேளையில் அவர் இயற்கை எய்தினார். அமரரின் உயரிய சேவையால் வளம்பெற்ற கல்விநிலையமும் தென்மராட்சி மீசாலைச் சமூகமும் அவருக்கு நேர்முகமாகத் தமது அஞ்சலியை செலுத்தக்கூட இயலாதவாறு நிலைமைகள் அமைந்து போயின என்பது கவலையை அதிகரிக்கின்றது.
இராமலிங்கம் அவர்கள் மக்களை நேசித்த ஓர் உன்னத படைப்பாளி. அவர் மறக்கப்பட முடியாதவர். தன் சேவைகள் வாயிலாக தென்மராட்சி மக்களின், மாணவர்களின் உள்ளங்களிலும் எழுதிய நவீன கவிதைகள் ஊடாக ஈழத்தமிழர் நெஞ்சங்களிலும்என்றும் நிலைத்திருப்பார். கனத்த மனவுணர்வுகளுடன் அவரது கவிதை ஒன்றில் இளைஞர்களுக்கு அவர்சொன்ன சிலவரிகளை இங்கே பதிவதுடன் இந்நினைவுக் குறிப்பினை முடிக்கின்றேன்.
இளைஞர்களே எச்சரிக்கை
புயல் எழுந்து வீசிடலாம்
உயர்மரங்கள் முறிந்திடலாம்
குடியிருக்கும் வீட்டுக்
கூரை பறந்திடலாம்
வீணாகச் சக்தியினை
விழலுக்கிறையாமல்
வாருங்கள் இளைஞர்களே
வந்தொன்று சேருங்கள்!
காற்றடிக்கும் காலமிது
கைவிளக்கை நம்பி
இனி இருட்டில் போகாதீர் !
க.பொன்னுத்துரை
கனோவர். யேர்மனி
23.09.2008
சூழலின் மீது கோபம் - தா.இராமலிங்கம் கவிதைகள்
ஈழத்தின் முக்கியமான படைப்பாளியும் விமர்சகருமான மு.தளையசிங்கம்
“தா. இராமலிங்கத்தின் கவிதைகளைப் படிக்கும்போது கவிஞர் சுய உணர்வுடன் தன் காலத்தையும் சூழலையும் சுற்றிவர வடிவாகப் பார்த்து, அப்படிப் பார்க்கும்போது தவிர்க்க முடியாமல் ஏற்படும் ஓர் திருப்தியின்மையால் உந்தப்பட்டுத் தன் உணர்ச்சிகளுக்கு உருவம் கொடுக்க முயல்வதை அவதானிக்க முடிகிறது. அத்தகைய உணர்வையும் திருப்தியின்மையையும் இன்றைய நம் கவிஞர்களிடம் காண்பது மிகமிக அரிது. பழைய இலக்கியங்களாலும் பழைய யாப்புமுறைகளாலும் கவரப்படும் அதே அளவுக்கு தங்கள் காலத்தையும் சூழலையும் பூரணமாக அறியவோ உணரவோ அவர்கள் முயல்வதில்லை. ஆனால் தா. இராமலிங்கத்தின் கவிதைகளிலே முழுக்க முழுக்க அவரிடமிருக்கும் தன் காலம், சூழல் பற்றிய உணர்வும் அந்த உணர்வு பிறப்பிக்கும் திருப்தியின்மையும், அந்தத் திருப்தியின்மை கோரும் மாற்றமுந்தான் முத்திரை பதித்து நிற்கின்றன. மஹாகவியின் "சடங்கு"விலும் முருகையனின் "துழாவிடும் தொண்டு"விலும் வெளிக்காட்டப்படும் அந்தத் திருப்தியின்மையும் மாற்றம் பற்றிய கோரிக்கையும் இராமலிங்கத்தின் கவிதைகளில் அவர் எழுத ஆரம்பித்துள்ள காலத்துக்கு ஏற்றவகையில் தர்க்கரீதியாக வளர்க்கப்பட்டு புரட்சிக்குரல் எழுப்புகின்றன. அவைதான் கவிதைகளின் உள்ளடக்கத்துக்கு மட்டுமல்ல உருவ அமைப்புக்கும் வித்திடுகின்றன. காலமும் சூழலும் அவரிடம் எழுப்பும் தீவிர உணர்வும் திருப்தியின்மையும் கவிதைகளின் உருவ அமைப்பிலும் யாப்பு முறைகளிலும் ஒரு புதிய உடைப்பையும், அதனால் ஒரு புதிய வளர்ச்சியையும் ஏற்படுத்துவதோடு அத்தகைய உடைப்பையும் மாற்றங்களையும் தவிர்க்க முடியாதவைகளாகவும் ஆக்கிவிடுகின்றன. படிப்பவர்களிடம் அதை ஏற்றுக்கொள்ளும் நம்பிக்கையும் ஏற்பட்டுவிடுகிறது.
புதுக் கவிதைகள் வெறம் தரமற்ற விடுகதைகளாய் இருக்காமல் தரமான உண்மையான கவிதைகளாய் இருக்க வேண்டுமானால் கவிஞனுக்குத் தன்னையும் தன் சூழலையும் பற்றிய பூரண உணர்வும் அது எழுப்பும் உத்வேகமும் எந்தளவுக்கு அத்தியாவசியமானவை என்பது இராமலிங்கத்தின் கவிதைகள் சிலவற்றைப் படிக்கும்போது தெரிய வருகின்றது. உணர்ச்சி, உள்ளடக்கம், உருவ அமைப்பு எல்லாம் பின்னிப்போய், ஒன்றையொன்று உருவாக்குபவையாய் ஒன்றி நிற்கின்றன.
Comments