உங்களுக்குக் கேட்கவில்லையா?
சிறீலங்காச் சிறைகளிலே
எமது இளைஞர்
உண்ணாமல் நோன்பிருந்து
உடல்வற்றி உலர்ந்து ஒடுங்க
உள்ளம் மினுங்கி
உதித்த நிலவொளியில்
விழித்து எழுங்கோ என்று
கூவி அழைத்த குரல்
இங்கு எம்மைத்
தட்டி எழுப்புகுதே!
உங்களுக்குக் கேட்கவில்லையா?
முற்றுகை சுட்டெரிப்பு
சிறைபிடிப்பு எல்லாம்
தமிழ் இனத்தை முடமாக்கி
இருந்து அரக்க வைக்கும்
திட்டமிட்ட சூழ்ச்சிச்
செயற்பாடு அல்லவோ?
அவர்கள் கேட்கிறார்கள்:
"எங்களை நீங்கள் மறந்துவிட்டீர்களா
எங்களை உங்களுக்கு
அடையாளம் தெரிகிறதா?" என்று.
உங்களுக்குக் கேட்கவில்லையா?
மரண தேவதைகள் சூழ்ந்து
மலர்தூவி
மங்களம் பாடி வாழ்த்த
சிறைக்கம்பி பாடி வாழ்த்த
சிறைக்கம்பி தாவிச்
சிறகடித்து வந்த குரல்
எமைஇங்கு
தட்டி எழுப்புகுதே!
அவர்கள் கேட்கிறார்கள்:
"உங்களை நீங்கள் மறந்துவிட்டீர்களா?
உங்களை உங்களுக்கு
அடையாளம் தெரிகிறதா?" என்று.
உங்களுக்குப் புரியவில்லையா?
ஏரிவளர்ந்த இளங்காளை மாடுகள்
பாரம் இழுத்து வருவதைப் பாருங்கோ!
லாடன் கட்டிய கால்களைத் தூக்கி
வேகமாய் நடப்பதைப் பாருங்கோ!
கப்புகள் வளைகள் கம்புகள் திடுகுகள்
முன்வந்து உதவிடும் மக்களைப் பாருங்கோ
அவர்கள் அழைக்கிறார்கள்:
"வாருங்கள்
மாண்டுபோன எம் மண்ணினை மீட்டிட
உழைப்பு யாவையும்
ஒருமுகப் படுத்துவோம்."
உங்களுக்குக் கேட்கவில்லையா?
(அலை புரட்டாதி 1986 இதழ்)
Comments