இனி ஏது?
எங்கிருந்து வந்ததுவோ
இந்தக் காற்று
தழுவிநிற்கும்
மூங்கில் இரண்டு
உராய்ந்து
பறக்கிறது சினப் பொறிகள்
தீப்பொறியாய்!
காய்ந்த சருகு
சுள்ளி விறகுகளைப்
பற்றி,
எரியுது
பட்ட மரங்களிலும் சேர்ந்து
பெருகு நெருப்பு!
தளிர்ச் சிரிப்பால் குளிர்விக்கும்
செடிகொடிகள்,
கொத்துக் கொத்தாய்க்
பூத்துத் துலங்குகிற
செம்மலர்கள்
இன்னும் பலவகைகள்,
குலைகுலையாக்
காய்த்துத் தூங்குகிற
காய்வகைகள்
கனிவகைகள்
எல்லாம்
வெம்பி வெதும்புவதோ?
கருவண்டு
முகந்தெரியும் முதுகோட்டுச்
சிறகு ஊதி வந்து
தேன் உறிஞ்ச....
இனி ஏது?
கூர்ச் சொண்டுச்
சிறுபறவை
கூட்டமாய் வந்து
கனிகொத்த.....
இனி ஏது?
Comments